இலங்கை முஸ்லிம்கள் தங்கள் பயன்படுத்தி வரும் கிப்லாவை எதிர்வரும் 28 ஆம் திகதி உறுதிப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக் குழுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் முஸ்லிம்களைக் கேட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 அல்லது 29 மற்றும் ஜூலை 16 அல்லது 17 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூரியனை முன்னோக்குவது கஃபாவை முன்னோக்குவதாகவே அமையும்.
ஆகவே சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன் நேர்த்தியான ஒரு தடியை 900 (அதாவது பூமிக்கும் அந்தத் தடிக்குமிடையிலான கோணம் செங்கோணமாக இருக்கும் விதத்தில்) நாட்டுவதுடன் பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும் நிழலின் மீது கோடிட்டுக் கொள்ளவேண்டும் பிறகு கோட்டினூடாக தடியை நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சூரியன் மக்காவை உச்சங்கொடுக்கும் அன்றைய தினம் தங்களது மஸ்ஜிதுகள், வீடுகள் மற்றும் தேவையான இடங்களுக்கான சரியான கிப்லாவை அறிந்து கொள்ள மேல் குறிப்பிட்டவாறு ஆவண செய்துகொள்ளும்படியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு செயலாளர் கேட்டுள்ளார். (மு)

No comments:
Post a Comment