நாங்கள் நிதானமிழந்து பக்குவமிழந்து அவசரப்படுவதென்பது புத்திசாலித்தனமல்ல - ரவூப் ஹக்கீம்

இன்றிருக்கின்ற கட்டத்தில் அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸினுடைய அரசியல் சம்பந்தமான ஒரு தடுமாற்றம் உள்ளது. இந்த நிலையில் நாங்கள் நிதானமிழந்து பக்குவமிழந்து அவசரப்படுவதென்பது புத்திசாலித்தனமல்ல. எனவேதான் எல்லா விசயங்களையும் ஆலோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏறாவூர் சமூக உறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை இடம்பெற்ற கலை விழாவும் கௌரவிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், 

"நான் இங்கு மேதாவித் தனமாகப் பேசி, உபதேசம் செய்து விட்டுப் போகவரவில்லை. இது ஒரு தேர்தல் காலமும் அல்ல. இருந்தாலும் நாட்டிலே ஒரு தேசிய மட்டத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் எல்லாத் தரப்புக்களாலும் படிப்படியாக ஆரம்பிக்கப்படுகின்ற ஒரு கட்டம் என்பதனால் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைமை அவசரப்பட்டு எதையும் உளறித் தள்ளிவிடவும் முடியாது. நாங்கள் மிகப் பொறுப்புணர்ச்சியோடு பேச வேண்டிய ஒரு கட்டத்திலே இருக்கின்றோம்.

இன்று இருக்கின்ற சூழல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கத்தின் தலைமை எவ்விதமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நிறைய விதம்விதமாக பல கோணங்களிலே பல விசயங்கள் வற்புறுத்தியும் வினயமாகவும் எனக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது.

நமது அரசியல் முன்னோடிகள் அரசியல் செய்ததை விடவும் இப்பொழுது ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த நேரத்தில் இருந்த நமது தலைமைகள் கட்சி மாறியதையெல்லாம் யாரும் கடிந்து கொள்ளவில்லை. ஊர் ஒற்றுமைப்பட வேண்டும் என்கின்ற ஒரு உயர்ந்த நோக்கம் எல்லோருக்கும் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லோரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றும் இப்பொழுது ஆலோசனைகள் சொல்லப்படுகின்ற ஒரு காலம். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் என்ன விலை கொடுத்தாவது அதனைச் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு அழுத்தம் இன்று பலவாறாக எங்களை நோக்கிச் சொல்லப்படுகின்றது.

விகிதாசாரத் தேர்தல் முறையில் விசித்திரமான அனுபவங்களை ஏறாவூர் மண் கண்டிருக்கின்றது. தேசிய அரங்கிலே ஏற்படுகின்ற புதிய விசயங்களை வைத்துத்தான் நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கத்தின் முடிவுகளைப் பற்றிப் பேசலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஏறாவூருக்கும் என்று மாத்திரம் ஒரு வியூகம் வகுக்க முடியாது. ஒரு தேசிய வியூகத்தின் ஒரு அங்கமாகத்தான் பிரதேச ரீதியாக எடுக்கப்படுகின்ற வியூகம் அமையலாம்.

தேசிய வியூகம் என்பது ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகங்களின் அதனுள்ளே இருக்கின்ற முஸ்லிம்களின் மன உணர்வுகளோடு ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய ஒரு முடிவாகவும் இருக்க வேண்டும்.

அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருக்கின்ற தற்போதைய ஜனாதிபதிக்கெதிராக ஒரு தனிமனிதனை நிறுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதற்காக எல்லா எதிர்க் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும், போதாக்குறைக்கு அரசிலிருந்தும் கொஞ்சப்பேரைப் பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதற்கான பல முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

அரசுக்குள்ளே இருக்கின்ற ஒரு சில கட்சித் தலைமைகள் இப்பொழுதே கொஞ்சம் குழப்பம் எடுக்கத் தொடங்கி விட்டனர் போலத் தெரிகின்றது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்திற்குள் இணைய நேர்ந்த கட்டத்திலே இருந்து தொடர்ந்தேர்ச்சையாக நாங்கள் சவால்களைச் சந்தித்துக் கொண்டுதான் வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கத்திற்கு ஒரு பலப்பரீட்சையாக வந்தது. கிழக்கு மாகாண ஆட்சியை வைத்தே ஒரு சில அரசியல் நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவலாய் ஒரு சிலர் இருக்கலாம்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் எல்லாவற்றையும் நிதானித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். தேசிய அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெறும் பகடையாகப் பாவிப்பதற்கு இன்று பலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய அரசியல் இந்த அமைச்சுப் பதவிகளை இலக்கு வைத்துச் செய்யப்படுகின்ற ஒன்றல்ல. முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமை விரட்டினாலும் போக மாட்டேன் என்று அடம்பிடிக்கின்ற காரணத்தினால் இந்த அமைச்சுப் பதவிகளில் தொங்கி இருப்பதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரே இலக்கு என்பது போல ஒரு பார்வை உண்டாக்கப்பட்டிருக்கின்றது.

இது அமைச்சர்கள் மலிந்து போயிருக்கின்ற ஒரு காலம். கல்லெறிந்தால் அமைச்சர்களின் தலைகளியேலே விழும் அளவுக்கு அமைச்சர்களின் எண்ணிக்கை மலிந்து போயிருக்கின்றது. எனவே இந்த அமைச்சுப் பதவிகளைப் பற்றிப் பேச பெரிதாக எதுவுமில்லை.

இந்த நிலையிலேதான் மிக உறுதியானதொரு முடிவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வந்தாக வேண்டிய ஒரு கட்டத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். அதிலே எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியாவிலே இந்துத்துவ மேலாதிக்க ஆட்சி என்பதை விடவும் ஊழல், குடும்ப ஆதிக்கம் இவற்றுக்கு எதிரான அலை என்கின்ற ஒரு விசயம் வெகுவான பாதிப்புக்களைக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த அரசாங்கத்திற்கு முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா! அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா! என்பதில் உள்ளுக்குள்ளே கொஞ்சம் முரண்பாடுகள் இருக்கின்றன. அடுத்தடுத்து வருகின்ற ஒரு சில மாதங்களுக்குள் சில தீர்க்கமான கட்டங்களை நாம் பார்க்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசாரத் தேர்தல் முறையின் விசித்திரங்கள் மூலம் இரு பிரதிநிதித்துவங்கள் கிடைக்கலாம் என்கின்ற விசயம் சாத்தியமாகியிருக்கின்றது. 

கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், ஸ்ரீ.மு.கா. தலைவர் ஏதாவது ஒரு முக்கிய தீர்மானத்தை இந்தக் கூட்டத்திலே சொல்லுவார் என்று எதிர்பார்த்து வந்திருக்கின்றார்கள். கல்குடாத் தொகுதி ஸ்ரீ.மு.கா. ஆதரவாளர்களைக் கலந்தாலோசிக்காமல் ஸ்ரீ.மு.கா. தலைவர் எந்த முடிவுக்கும் வரமாட்டார் என்பதை இந்த இடத்திலே நான் உறுதியாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். ஏனென்றால், கல்குடாத் தொகுதி ஸ்ரீ.மு.கா. ஆதரவாளர்கள் ஏற்கெனவே பல தடவைகள் நொந்து போனவர்கள்.

ஸ்ரீ.மு.கா. அரசியலில் மறைந்த தலைவருடைய திடீர் மறைவுக்குப் பிறகு கல்குடாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அனுபவிக்கின்ற வாய்ப்பு ஸ்ரீ.மு.கா. ஊடாக ஏற்பட்டது. அதே நேரத்தில் ஏறாவூருக்கும் அது தனது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்கின்ற கடமையை ஸ்ரீ.மு.கா. செய்து வந்திருக்கின்றது.

கடந்த நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலிலும் ஸ்ரீ.மு.கா. பிரதிநித்துவம் இவ்விரு ஊர்களுக்கும் கிட்டவில்லை என்கின்ற ஆதங்கம் இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏறாவூர் பிரதேசம் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் சமன்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் என்கின்ற இரண்டு தரப்புக்களுக்கிடையில் நின்று ஸ்ரீ.மு.கா. தனது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல வியூகங்களை வகுத்துச் செயற்பட்டிருக்கின்றது. அபிவிருத்தி என்கின்ற ஒரு விசயத்தை அடைந்து கொள்வதற்காக பலவிதமான முன்னெடுப்புக்களை வித்தியாசமாக எடுத்து சின்னச்சின்ன அடைவுகளை எல்லோரும் அடைந்திருக்கலாம். அந்த அடைவு மட்டம் போதாது.

ஆன்மீகப் பிளவுகளும் முஸ்லிம் அரசியலிலே தாக்கங்களை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு சிலர் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். புலிகள் இருந்த கட்டத்தை விடவும் வித்தியாசமான சூழ் நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலிகள் இருந்த இடத்திலே இப்பொழுது சிங்கள மேலாதிக்க சக்திகளின் தீவிரப்போக்குடைய கும்பல்கள் இருக்கிறார்கள்.

புலிகளிளுக்குச் சமமாக இந்த சிங்கள மேலாதிக்க சக்திகளின் தீவிரப்போக்குடைய கும்பல்களின அட்டகாசம் இருக்கின்றது. இப்பொழுது வடக்கு - கிழக்குக்கு வெளியிலே இருந்த நிலவரம் முன்பு வடக்கு கிழக்கிலே இருந்தது மாதிரியான ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்திருக்கின்றது. இந்த நிலையிலே ஒரு பலவீனமான எதிர்க்கட்சி, மற்றும் ஆங்காங்கே உண்டான கட்சிகள் எல்லாம் ஒருமித்து திரண்டு வருவது  ஒரு சவாலுக்குரிய விசயமாக மாறிவருகின்றது. இந்தக் கட்டத்திலேதான் ஸ்ரீ.மு.கா. வின் நம்பகத்தன்மையையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது.

ஸ்ரீ.மு.கா. குறித்த ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற முறையில் நெறிப்படுத்தப்படுகின்ற ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டத்திலே நாம் இருக்கின்றோம். மாகாண சமன்பாட்டில் ஸ்ரீ.மு.கா. வின் சக்தி என்பது சென்ற தடவை தனித்துத் தேர்தலில் நின்றதன் காரணமாக அது காப்பாற்றப்பட்டது. 

பிராந்திய அரசியலில் ஸ்ரீ.மு.கா. தீர்க்கமான சில முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். ஆனால், அதற்கு முன்பு தேசிய மட்டத்திலே சில முடிவுகளை நாங்கள் எடுத்தாக வேண்டும். அங்கொரு முடிவும் இங்கொரு முடிவுமாக ஸ்ரீ.மு.கா. வின் முடிவு இருக்க முடியாது. எதிரணியும் சரியாக தனது அரசியலை அமைத்துக் கொள்வதற்குத் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஸ்ரீ.மு.கா. மிக நிதானமாகத்தான் செயற்படவேண்டியிருக்கின்றது" என்றார். http://www.addalaichenai.info

No comments:

Post a Comment