அல் குர்ஆன் அவமதிப்பு: பொது பல சேனாவுக்கு எதிராக முறைப்பாடு

முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்ததாக  கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட அவ்வமைப்பின்

 உறுப்பினர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். 

ஜன பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரக்க விஜித்த தேரரினால் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகவே மேற்படி முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜன பல சேனாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ள பொது பல சேனா அமைப்பினர் அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்தனர் என்று கொம்பனித்தெரு, வொக்ஷல் வீதியைச் சேர்ந்த நூர்தீன் மொஹமட் தாஜுதீன் என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நிப்போன் வீடியோ ஆதாரங்களை கையளிக்குமாறு உத்தரவு

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஜன பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளரான வட்டரக்க விஜித்த தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது பல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வீடியோ ஆதாரங்களை கொம்பனிவீதி பொலிஸாரிடம் கையளிக்குமாறு  கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.எம்.சஹாப்தீன் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டிற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கடந்த 9 ஆம் திகதி கைது செய்யவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். -தமிழ் மிரர்

No comments:

Post a Comment